தேடல் தொடங்கியதே..

Wednesday 28 November 2012

கீழக்கரையில் இன்று (28.11.2012) மின்சாரம் இருக்காதாம் !? - பவர் இல்லைனாலும் 'பவர் கட்' !

கீழக்கரை துணை மின் நிலையத்தில் இன்று (28.11.2012) புதன் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை, ஏர்வாடி, முகம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம்,  காஞ்சிரங்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், காலை 10 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற் பொறியாளர்  க‌ங்காத‌ர‌ன் தெரிவித்துள்ளார்.

கீழக்கரை பகுதியில் ஏற்கனவே 16 மணி நேரம் அறிவிக்கப்படாத மின் வெட்டு நிலவி வரும் வேளையில், இது போன்ற அறிவிப்புகள் நகைப்புக்குரியதாக இருப்பதாகவும், 'இல்லாத' மின்சாரத்தில்.. மீண்டும் எப்படி பவர் கட் செய்ய முடியும்?? என்றும் அப்பாவித் தனமான கேள்விகளை எழுப்பிய வண்ணம், பொது மக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்ய துவங்கி விட்டனர். அப்பாவிகளாக... 


2013-லும் மின்சாரம் கிடைப்பது கஷ்டம் தானாம்... (மின்சாரம் இருந்தால் இதையும் படியுங்கள்)

**ஜூனியர் விகடனில் 'ஷாக்... ரிப்போர்ட்' தரும் கட்டுரையாளர் எஸ்.முத்துகிருஷ்ணன் **
தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மின் வெட்டுப் பிரச்னையைத் தான் தேர்தல்  பிரசாரத்தில் முக்கிய ஆயுதமாக ஜெயலலிதா கையில் எடுத்தார்.  'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் வெட்டே இருக்காது என்று உறுதி அளித்தார். முதல்வரானதும் அவர் வெளியிட்ட அறிக்கை​யில், '2012-ம் ஆண்டு ஜூனில் 1,865 மெகா வாட் மின்சாரம் கிடைத்துவிடும். அப்போது மின் வெட்டு சீரடையும்'' என்று ஆறுதல் கூறி​னார். ஆனால், மின்பற்றாக்குறை 2 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம்... 16 மணி நேரமானதுதான் மிச்சம். சென்னைவாசிகளுக்கு 2 மணி நேரம்தான் மின்வெட்டு என்பதால், கஷ்டம் தெரியவில்லை. மற்ற மாவட்டத்துக்காரர்கள் தலைசுற்றிக் கிடக்கிறார்கள்!

முழுநாளும் மின்வெட்டாக மாறுவதற்குள் அரசு செய்ய வேண்டியது என்ன ? என விவரிக்கிறார் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் கே.விஜயன். ''மின்சாரப் பற்றாக்குறை ஒன்றும் தமிழகத்துக்குப் புதியது அல்ல. மின் வாரியத்தின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, 1982-ம் ஆண்டில் இருந்தே மின் பற்றாக்குறை இருக்கிறது. ஆனால், ஒட்டு​ மொத்தத் தமிழகமும் வீதிக்கு வந்து போராடும் அவலநிலை இப்போது தான் ஏற்பட்டு இருக்கிறது. மின்சாரத்துக்காகப் போராடி, போராடி மக்களும் களைத்து விட்டனர்.

முதல்வர் ஜெயலலிதா, 'என்னாலும் தாங்க முடியவில்லை. அதற்காக, ஆயிரம் முறை அல்ல; லட்சம் முறை வருந்துகிறேன்’ என்று கூறியுள்​ளார். வருந்தினால் மின்சாரம் வரும் என்றால், மக்கள் சந்தோஷப்படுவார்கள். மின்சாரப் பற்றாக்குறை 2013-ல் தீர்ந்து விடும்; அதுவரை பொறுத்துக்​கொள்ளுங்கள் என்பது தான் முதல்வரின் கடைசி ஆறுதல்.

கடந்த 45 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. தான் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. மின் பற்றாக் குறைக்கும் மக்கள் படும் அவதிகளுக்கும் இந்த இரண்டு அரசுகளுமே பொறுப்பு. மாநிலத்தின் மின்தேவை ஆண்டுக்கு 8 முதல் 10 சதவிகிதம் வரை அதிகரித்துக் கொண்டே போகிறது. தேவை அடிப்படையில் இப்போதுள்ள மின் உற்பத்தியோடு 8 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி அதிகரித்து இருக்க வேண்டும். ஆனால், தமிழக மின் உற்பத்தி அரசுத் தரப்பில் கடந்த 16 ஆண்டுகளில் 578 மெகா வாட் மட்டும்தான் உயர்ந்து இருக்கிறது. இது தான் மக்கள் மீது அரசுக்கு உள்ள அக்கறை.


ஆனால், இதே காலகட்டத்தில் 1996-ம் ஆண்டு 108 லட்சங்களாக இருந்த மின் நுகர்வோர் எண்ணிக்கை, 2,000-ல் 138 லட்சங்களாகவும் 2012-ல் 232 லட்சங்களாகவும் உயர்ந்து இருக்கிறது. இதே போல், 1,869 பன்னாட்டு நிறுவனங்​களும் 42 சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் உருவாகின. 300 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்த நிறுவனமாக இருந்தால், தடை இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். புதிய பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசுதான் அனுமதி அளிக்கிறது. அதற்கான மின்சாரத்தைத் தடையின்றித் தருவதாக தமிழக அரசும், அதற்கான ஒப்பந்தத்தில் உறுதிமொழி அளித்து இருக்கிறது. அதே போல், மக்களுக்குத் தேவை​யான மின்சாரத்தைத் தடையின்றிக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? ஏன் எடுக்க​வில்லை. மக்கள் போராட்டம் நடத்தியவுடன், '2013-ல் மின்சாரம் வந்துவிடும்; எதிர்காலத்துக்கும் 4,887 மெகா வாட் அளவுக்கு மின் திட்டங்கள் கைவசம் உள்ளன என்று முதல்வர் கூறியுள்ள சமாதானத்தை என்னவென்று சொல்வது?

2007-ம் ஆண்டில் புதிதாக வடசென்னை மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. நிதி இல்லாததால், கட்டுமானப் பணி தாமதமானது. மின் தேவையைக் கணக்கில் கொண்டு கட்டுமானப் பணிகளை அவசரப்படுத்தி, 2011-ம் ஆண்டு தொடக்கத்திலேயே மின் உற்பத் தியைத் தொடங்கி இருந்தால், 1,800 மெகா வாட் மின்சாரம் கிடைத்திருக்கும். இப்போது, 500 மெகா வாட், மேட்டூரில் அனல் மின்நிலையத்தில் சோதனை ஓட்டம் நடக்கிறது.

வட சென்னையில் 600 மெகா வாட் திட்டத்துக்குத் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்தத் திட்டங்களோடு, திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் திட்டம் 500 மெகா வாட் யூனிட் ஒன்று தயாராகி விட்டது. அதிலும் சோதனை ஓட்டம் நடக்கிறது. இந்த மூன்று திட்டங்களும் 2013-ல் முழுவீச்சில் மின் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், கூடங்குளம் திட்டத்தின் மூலம் 925 மெகா வாட் மின்சாரம் கிடைத்தால், பிரச்னையை ஓரளவுக்கு சமாளித்து விடலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் கணக்குப் போட்டு உள்ளனர்.

ஆனால், நடைமுறையில் அதற்கான வாய்ப்பே இல்லை. இப்போது இயங்கி​வருகிற தமிழக மின் வாரியத்தின் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்காததால் அதிகமாகத் தேவைப்படும் 35 லட்சம் டன் நிலக்கரி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. புதிதாகத் தொடங்கப்பட்டு உள்ள வடசென்னை, மேட்டூர் அனல் மின் நிலையங்களுக்கு 90 லட்சம் டன் நிலக்கரி தேவை. ஆனால், மத்திய அரசு 37 லட்சம் டன் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து உள்ளது. மீதி 53 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாட்டில் இருந்துதான் கூடுதல் விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை. மின் உற்பத்திக்குத் தயாராக இருந்தாலும் நிலக்கரியைத் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தால் தான் தடையற்ற மின்உற்பத்தி சாத்தியம்.



1970-ல் தொடங்கப்பட்ட 450 மெகா வாட் எண்ணூர் அனல் மின் நிலையம், 600 மெகா வாட் நெய்வேலி அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி எல்லாம் ஆயுள் முடிந்து போய் ஓடிக்கொண்டு இருக்கிறது. 600 மெகா வாட் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் வயது 30. அதுவும் உரிய பராமரிப்பு இல்லாமல் இந்த ஆண்டில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் இரு முறை தீப்பிடித்துப் பாதிக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. மேலும், காலாவதி ஆகிப்போன இந்த அனல் மின் நிலையங்களில் படிப்படியாக உற்பத்தித் திறன் குறைந்துகொண்டே வருகிறது.

இதற்கு மாற்றாக, புதிய அனல் மின்நிலையங்கள் அமைக்க வேண்டிய கட்டாயம். இப்போது, அரசு அறிவித்துள்ள உடன்குடி, உப்பூர், எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் 8,000 மெகா வாட் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நிதி ஒதுக்கி, மத்திய அரசின் நிலக்கரி ஒதுக்கீடு பெற்று, செயல்பாட்டுக்கு வர கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிடும். எனவே, ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல திட்டங்களைத் தூசி தட்டினால், ஓரளவுக்கு மின் தேவையை சரிசெய்ய முடியும்.

18 சதவிகிதம் லைன் லாஸ் என்று கூறப்படும் மின் இழப்பை 15 சதவிகிதமாகக் குறைத்தாலே, 300 முதல் 400 மெகா வாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும். சென்னையில் பேசின் பிரிட்ஜ் அருகில் 493 கோடியில் டீசல் மூலம் 180 மெகா வாட் மின் நிலையம் கடந்த ஓர் ஆண்டாக மின் உற்பத்தி செய்யவில்லை. ஆனால், இந்த மின் நிலையத்தின் அருகில் உள்ள தனியார் மின்நிலையம் டீசல் மூலம் தினமும் 200 மெகா வாட் மின் உற்பத்தி செய்கிறது. இதே போல மாநிலம் முழுவதும் தனியாரின் ஏழு யூனிட்கள் சிறப்பாகச் செயல்படுகிறது. அவர்கள், மின் வாரியத்துக்கு மின்சாரத்தை விற்கிறார்கள். எனவே, பேசின் பிரிட்ஜ் அரசு டீசல் மின் நிலையத்தில் முழுவீச்சில் உற்பத்தியை உடனே தொடங்க வேண்டும்.

எரிவாயு மூலம் மின்உற்பத்தி செய்ய 396 மெகா வாட் மின் உற்பத்தி எந்திரங்கள், 50 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே மின்உற்பத்தி செய்கின்றன. தென் மாவட்டத்தில்  அமைக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒரு நாள்கூட முழுமையான 92 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை. ஏன் முழுமையான மின் உற்பத்தியைத் தரவில்லை என்று கேட்பாரும் இல்லை. தஞ்சை மாவட்டம் குத்தாலத்தில் 105 மெகா வாட் எரிவாயு மின் நிலையத்தில் ஒரு வருடமாக மின் உற்பத்தி இல்லை. சோலையாறு நீர் மின் திட்டத்தில் ஜெனரேட்டர் பழுது காரணமாக 70 மெகா வாட் மின் உற்பத்தி முடங்கிப்போய்க் கிடக்கிறது.

மாநிலத்தின் மொத்த மின் நுகர்வில் 38 சதவிகிதம் தொழில் நிறுவனங்களுக்குத் தான் தேவைப்படுகிறது. அதாவது, கிட்டத்தட்ட 4,000 மெகா வாட் தேவை. இதில், 3,600 மெகா வாட் மின்சாரத்தை அந்தந்தத் தொழிற்சாலைகளே உற்பத்தி செய்யும் வகையில் அவர்கள் ஜெனரேட்டர்கள் வைத்துள்ளனர். ஜெனரேட்டர் டீசலுக்கு ஆகும் செலவில் மின்சாரக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு  5.50 போக மீதி 12, அந்த மாநில அரசு ஏற்க வேண்​டும். தனியாரிடம் யூனிட்டுக்கு சராசரியாக 12 கொடுக்கும் நிலையில் இது ஒன்றும் கூடுதல் செலவு அல்ல. ஆகவே, பிரச்னையை சமாளிக்க இப்போதைக்கு அனுமதிக்கலாம்.

மேலும், மின்வெட்டு உள்ள காலங்களில் அலங்கார மின்விளக்குகள், ஆடம்பர விளக்கு​களுக்குத் தடை விதிக்க வேண்டும். திருட்டு மின்சாரம் எடுப்பதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ஐந்து ஆண்டுகளில் 3,000 மெகா வாட் சூரிய ஒளி மின் திட்டம் திட்டத்தைப் படிப்படியாகத் தான் நிறைவேற்ற முடியும். இதற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இந்தத் திட்டத்தை முதலில் நட்சத்திர ஹோட்டல்கள், பெரிய வர்த்தக நிறுவனங்களில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். இப்போதுள்ள மின் உற்பத்தித் திட்டங்கள் மற்றும் தேவை  அடிப்படையில் பார்த்தால், இப்போதுள்ள மின்வெட்டு 2017-ல்தான் சீரடைய வாய்ப்பு இருக்கிறது. அதுவரை மேற்கூறிய மாற்று ஏற்பாடுகளைச் செய்தால் தான் ஓரளவுக்கு மின்வெட்டை சரிசெய்ய முடியும்'' என்றார்.

மின்வெட்டு குறித்து மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ''மின்சாரப் பிரச்னை குறித்து முதல்வர் மிகுந்த கவலையில் உள்ளார். மின் தட்டுப்பாட்டைக் குறைக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மின்நிலை குறித்து வாரா​ வாரம் ஆய்வு செய்கிறோம். கூடுதல் மின்சாரம் கேட்டாலும் மத்திய அரசு தரவில்லை. மத்தியத் தொகுப்பில் இருந்து தரவேண்டிய மின்சாரத்தையும் 1,000 மெகா வாட் அளவுக்குக் குறைத்துள்ளது. நிலக்கரி ஒதுக்கீட்டிலும் ஓரவஞ்சனை செய்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து விலைக்கு மின்சாரம் வாங்கினாலும் அதைக் கொண்டுவரும் வழித்தடத்தை மத்திய அரசு அமைத்துத் தரவில்லை. இருப்பினும் தமிழக அரசு செய்யும் முயற்சிகளால், 2013 ஜூனில் மின் வெட்டு சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.

                     வெளிச்சக் கிரகணங்கள் வெகுதூரத்தில் இருக்​கின்றன!

No comments:

Post a Comment